தமிழ்நாடு செய்திகள்

கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுப்பு

Published On 2024-03-15 15:07 IST   |   Update On 2024-03-15 15:07:00 IST
  • பிரதமர் நரேந்திர மோடி வருகிற 18-ந்தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார்.
  • கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.

கோவை:

தமிழகம் வந்த பிரதமர் மோடி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இன்று எழுச்சி உரையாற்றினார்.

இதையடுத்து கேரள மாநிலம் பத்தனம்திட்டாவுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வருகிற 18-ந்தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார். கோவை பயணத்தின்போது, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி பாராளுமன்றத்தில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

பிரதமர் மோடி மற்ற மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களில் மட்டுமே பங்கேற்று பேசி வந்தார். ஆனால் கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த ரோடு ஷோவானது சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு நடத்தப்பட உள்ளதாகவும், ரோடு ஷோவின்போது பிரதமர் மோடி பொதுமக்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.

ஆலோசனையின்போது, கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்தது.

பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க முடியாது என மாநகர காவல் ஆணையாளர் கடிதம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News