தமிழ்நாடு செய்திகள்

இன்று 21-வது சுனாமி நினைவு தினம்- குமரி கடற்கரை கிராமங்களில் பலியானவர்களுக்கு மலர் அஞ்சலி

Published On 2025-12-26 13:45 IST   |   Update On 2025-12-26 13:45:00 IST
  • 119 பேர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
  • சுனாமி தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.

கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி பேரலை உருவானது. இந்த ஆழிப்பேரலை தமிழகத்தின் கடலோர பகுதிகளான சென்னை, நாகை, வேளாங் கண்ணி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தில் கன்னி யாகுமரி, மணக்குடி, கொட்டில்பாடு, குளச்சல் ஆகிய இடங்களை பயங்கரமாக தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் சிக்கி பலியானார்கள்.

குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் பலியானவர்கள் நினைவாக அந்தந்த கிராமங்களில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபிக்கு ஆண்டுதோறும் டிசம்பர் 26-ந்தேதி இறந்த வர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதன்படி சுனாமி நினைவு தினமான இன்று சுனாமி பேரலைக்கு பலியா னவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கன்னியாகுமரி முக்கடல் சங்கம் கடற்கரையில் இறந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ஸ்தூபிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

நிகழ்ச்சியில் கலெக்டர் அழகுமீனா கலந்து கொண்டு நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் இன்று காலை நினைவு திருப்பலி நடத்தப்பட்டது. ஆலய பங்குத்தந்தை அஜன் சார்லஸ், சாஜன் செசில் தலைமையில் நடந்த திருப்பலியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து பெண்கள், ஆண்கள், குழந்தைகள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் 119 பேர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கல்லறையில் பெண்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

21 ஆண்டுகள் ஆன பிறகும் அந்த வடு மாறாத அளவிற்கு உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. கொட்டில்பாடு சுனாமி காலனியில் இருந்து ஊர்வலமாக சென்ற மக்கள் கல்லறை தோட்டத்தில் இறந்தவர்களின் நினைவாக மலர்வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்குள்ள ஆலயத்தில் நினைவு திருப்பலி நடந்தது.

கொட்டில்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும், பூ மாலைகள் அணிவித்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுனாமி 21-வது நினைவு தினத்தையொட்டி இன்று குமரி மாவட்டத்தில் மீன வர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடற்கரை ஓரங்களில் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தது. குளச்சல் பகுதியில் சுனாமி தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.

Tags:    

Similar News