தமிழ்நாடு

பொன்னேரி அருகே முதியவர் படுகொலை- கோவிலை நிர்வகிப்பதில் தகராறு

Published On 2022-09-08 07:40 GMT   |   Update On 2022-09-08 07:40 GMT
  • முனீஸ்வரன் கோவிலை நிர்வாகிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
  • 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரி அருகே உள்ள பர்மா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது70). கட்டிட மேஸ்திரியான இவர் பொன்னேரி தச்சூர் சாலையில் சிற்றுண்டி வியாபாரமும் செய்து வந்தார்.

இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்று உள்ளனர். இதையடுத்து நேற்று மாலை சுப்பையா மட்டும் தனியாக தனது தள்ளுவண்டியில் அமர்ந்து இருந்தார்.

அப்போது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மகும்பல் முதியவர் சுப்பையாவை சுற்றி வளைத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொலை கும்பலிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சுப்பையா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிருக்கு போராடிய சுப்பையாவை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் போகும் வழியிலேயே சுப்பையா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News