தமிழ்நாடு

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை- வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Published On 2022-08-24 15:20 GMT   |   Update On 2022-08-24 15:20 GMT
  • கடந்த ஜுன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • தற்போது வரை தமிழகத்தைச் சேர்ந்த 94 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை:

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த 22-8-2022 அன்று நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இது கடந்த ஜுன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக நடைபெறும் ஐந்தாவது நிகழ்வாகும் என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை தமிழகத்தைச் சேர்ந்த 94 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும், அவற்றின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அவர்களது படகிற்கான உரிமையைக் கோர வேண்டுமென்ற நிபந்தனையின் பேரிலேயே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்றும், தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சரை தனது கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News