தமிழ்நாடு

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி ஆஜர்

Published On 2023-11-30 06:18 GMT   |   Update On 2023-11-30 08:38 GMT
  • செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
  • பொன்முடி இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

சென்னை:

தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி செம்மண் குவாரிகளில் மணல் அள்ளியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக 2012-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பொன்முடி, மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதுதொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி ஏற்கனவே ஆஜரானார். அப்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை முடிவில் அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறையினர் கைது செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் விசாரணைக்கு பிறகு பொன்முடியை அமலாக்கத்துறையினர் விடுவித்தனர்.

இந்த நிலையில் செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இதை ஏற்று பொன்முடி இன்று காலை 10.45 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக மீண்டும் அதிரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அமலாக்கத்துறையினர் தாங்கள் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையிலேயே பொன்முடியிடம் 2-வது முறையாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

Similar News