தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட போகிறது: குஷ்பு

Published On 2024-03-20 03:00 GMT   |   Update On 2024-03-20 03:36 GMT
  • தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஏராளமான திட்டங்கள் கொடுத்து உள்ளார்.
  • மக்களுக்கு சேவை செய்யும் பிரதமராக மோடி உள்ளார்.

சேலம்:

சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடந்த பா.ஜனதா கூட்டத்தில் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், 'இங்கு கூடியுள்ள கூட்டம் காசு கொடுத்து வந்த கூட்டம் அல்ல. நரேந்திர மோடி மீது உள்ள பாசத்தால் வந்த கூட்டம். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்.

தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஏராளமான திட்டங்கள் கொடுத்து உள்ளார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது எத்தனை திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று தி.மு.க.வினரால் பட்டியல் கொடுக்க முடியுமா? மீண்டும் தாமரை மலரும். தமிழ்நாட்டில் இருந்து அதிகப்படியான எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும்' என்றார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் இதுவரைக்கும் ஆளும் கட்சியில் இருந்து எங்களை தாண்டி வேறு யாரும் வரமுடியாது என்று உட்கார்ந்து இருக்கின்றனர். நிச்சயம் பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது என்பதை அனைவரும் பார்க்க போகிறார்கள்' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மோடி போன்று பிரசாரத்திற்கு வேறு எந்த பிரதமரும் தமிழகத்திற்கு வந்தது இல்லை. பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதை பிரமிப்பாக பார்க்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்யும் பிரதமராக மோடி உள்ளார். தேர்தலில் போட்டியிட இதுவரை நான் (குஷ்பு) சீட் கேட்கவில்லை' என்றார்.

Tags:    

Similar News