5 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- ஏப்.24-ந்தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆக இருக்கக்கூடும்.
- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஏப்.23 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வியர்வை மழையில் நனைந்தபடியே கொளுத்தும் வெயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி பகலில் அதிகரித்து காணப்படும் வெயிலால் இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகரித்து அனல் காற்றே வீசுகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில், அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 3-5 செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஏப்.21-ந்தேதி முதல் ஏப்.24-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
ஏப்.24-ந்தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆக இருக்கக்கூடும்.
மற்ற நேரங்களில் 40-75% ஆகவும், கடலோரப் பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஏப்.23 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.