தமிழ்நாடு

மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு மட்டுமே 9ஆம் தேதி வரை விடுமுறை- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் விளக்கம்

Published On 2022-10-05 12:03 GMT   |   Update On 2022-10-05 12:03 GMT
  • சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுகிறது
  • அரசின் விடுமுறை நீட்டிப்பு அறிவிப்பானது, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது.

சென்னை:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த மாதம் (செப்டம்பர்) 30ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறைகளுடன் சேர்த்து அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு 6ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், கடந்த கோடை விடுமுறை நாட்களின்போது, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் எண்ணும் எழுத்துப் பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் அதற்கு ஈடுசெய்யும் பணி விடுப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, தமிழகத்தில் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பானது, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. அதேசமயம், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுவதால், பள்ளிகள் நாளை திறக்கப்படுமா அல்லது தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, 10ஆம் தேதி திறக்கப்படுமா அல்லது 13ஆம் தேதி திறக்கப்படுமா என்ற குழப்பம் நீடித்தது.

இதுபற்றி மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள 9ம் தேதி வரை விடுமுறை என்பது, மெட்ரிக் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளார். எனவே, சிபிஎஸ்இ பள்ளிகள் நாளை செயல்படும். 

Tags:    

Similar News