தமிழ்நாடு

இந்தியாவிலேயே முதல் முறையாக போடியில் தானிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்படுகிறது- அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-06-06 05:22 GMT   |   Update On 2023-06-06 05:22 GMT
  • நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
  • முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலசொக்கநாதபுரம்:

இந்திய உணவுக்கழகம் விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் நெல்கொள்முதல் செய்கிறது. பல்வேறு இடங்களில் போதிய கிடங்கு வசதி இல்லாததால் தானியங்கள் திறந்த வெளியில் வைக்கப்படுகின்றன.

இதனால் மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. நாடு முழுவதும் 33 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில் அதனை சேமித்து வைக்க போதிய கிடங்கு வசதி இல்லை.

இதனால் தானியங்கள் வீணாகி வருகின்றன. இதனை தடுக்க மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

வேளாண் அமைச்சகம் மற்றும் உணவு, பொது வினியோக அமைச்சகம் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு அமைச்சகம் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் ஒன்றாக தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக 1000 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது.

இதற்காக 4 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு 1 ஏக்கரில் கிடங்கு கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனமான நாப்கான் ஆய்வு செய்துள்ளது. விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்ததும் ரூ.2 கோடி செலவில் சாலைப் போக்குவரத்து உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய கிடங்கு கட்டப்படும். இங்கு போடி மற்றும் சில்லமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்படும்.

ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் வாயிலாக கிடங்கு அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் பரவலாக சேமிப்பு வசதிகள் கிடைக்கும். விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள் உள்ளூரிலேயே உடனுக்குடன் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும். தானியங்கள் வீணாவது தடுக்கப்படுவதுடன் விவசாயிகளுக்கு போக்கு வரத்து செலவு குறையும்.

மேலும் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News