தமிழ்நாடு

அரபிக்கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிதியுதவி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-03-09 10:39 GMT   |   Update On 2024-03-09 10:39 GMT
  • ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு சமையல் பணிக்காக சென்றவர் மாயம்.
  • சமையல் பணிக்காகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்தார்.

அரபிக்கடலில் தவறி விழுந்து மாயமான குமரி மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

குளச்சல் கிராமத்தை சேர்ந்த யாசர் அலி என்பவர் கொச்சி அருகே அரபிக் கடலில் படகில் இருந்து தவறி விழுந்து மாயமானார்.

ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு சமையல் பணிக்காக சென்ற யாசர் அலி கடலில் தவறி விழுந்தார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், குளச்சல் "அ" கிராமம், காமராஜ் சாலையைச் சேர்ந்த முஹைதீன் யாசர் அலி (வயது 32) த/பெ.இப்ராஹீம் என்பவர் கடந்த 08.01.2024 அன்று கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி துறைமுக கடலோர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அரபிக் கடலில் 163 கி.மீ. வடமேற்கு திசையில் ஆழ்கடலில் படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் சமையல் பணிக்காகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்துள்ளார்.

அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை கண்டுபிடிக்க இயலாமல் காணாமல் போயுள்ளார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள திரு.முஹைதீன் யாசர் அலி அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News