தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே அலைதான்... அது அதிமுக அலை: மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published On 2024-03-29 03:34 GMT   |   Update On 2024-03-29 05:39 GMT
  • அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்கள் எடுத்த முடிவு.
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை எதிர்ப்பது போல் வெளியில் வீர வசனம் பேசி வருகிறார்.

மதுரை:

மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி ஏற்பட்டதை அடுத்து நிர்வாகிகள் தொண்டர்கள் எழுச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

தமிழகத்தில் ஒரே அலை தான் வீசுகிறது, அது அ.தி.மு.க. அலையாக வீசுகிறது. அ.தி.மு.க. இதுவரை என்னென்ன சாதனைகள் செய்துள்ளோம், இனி என்னென்ன சாதனைகள் செய்யப் போகிறோம் என மக்களிடம் கூறுவதால் மக்கள் அ.தி.மு.க. கூட்டணியை விரும்புகிறார்கள்.

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கள்ளக்கூட்டணி வைத்துள்ளது என முதலமைச்சர் விமர்சனம் செய்வதற்கு அவரே விளக்கம் அளிக்க வேண்டும். இப்படி எல்லாம் யாரும் விமர்சனம் செய்ததே இல்லை. ஒவ்வொரு தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படுகிறது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க. மீது அவதூறு பரப்பி வருகிறது.

தோல்வி பயத்தின் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அ.தி.மு.க.வை பற்றி அவதூறாக பேசி வருகிறார்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தோம், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பு எதை பேசுவது? தி.மு.க. மாதிரி நாங்கள் அல்ல, அ.தி.மு.க. கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்போம். கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம். கூட்டணியில் இருக்கும்போது கட்சியினரை விமர்சனம் செய்யக்கூடாது. அப்படி விமர்சனம் செய்தால் உள்ளடி வேலை செய்வதாக அர்த்தம்.

கூட்டணி கட்சிகளை விமர்சனம் செய்வது தி.மு.க.விற்கு கைவந்த கலை. கூட்டணி கட்சியினருக்கு அ.தி.மு.க. என்றுமே விசுவாசமாக இருக்கும். தமிழ் நாட்டு மக்களுக்கு பாதிப்பு வருகின்ற திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம். தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடைவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். அ.தி.மு.க.விற்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மக்களிடம் அபரிமிதமான செல்வாக்கு உள்ளது. அதனால் 40 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்.

தேர்தலில் நிற்க பணம் இல்லை என நிர்மலா சீதாராமன் கூறி இருப்பது அவருடைய சொந்த பிரச்சனை. இதுகுறித்து அவர் தான் கருத்து கூற வேண்டும். ஜனநாயக நாட்டில் யாரும் பெரியவர்கள் இல்லை, அனைவரும் சமமாக உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிடக்கூடிய 5 ஓ.பன்னீர்செல்வமும் தேர்தலில் நிற்க தகுதியானவர்கள்.

அ.தி.மு.க.வில் 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்கள் எடுத்த முடிவு. ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.விலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு அல்ல.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை எதிர்ப்பது போல் வெளியில் வீரவசனம் பேசி வருகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருப்புக்குடை பிடித்தால் பிரதமர் கோபித்துக் கொள்வார் என வெள்ளைக் குடை பிடிக்கிறார். தமிழ் நாட்டில் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அமைச்சர் உதயநிதி ஓடோடி சென்று பிரதமரை அழைத்து வருகிறார். பிரதமரிடத்தில் சரணாகதி அடைந்து விட்டு வெளியே பிரதமரை எதிர்ப்பது போல் இரட்டை விடும் போடுகிறார்கள். தேர்தலில் மிட்டா மிராசுகள் நின்ற காலம் போய் சாமானிய தொண்டனும் போட்டியிடலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News