தமிழ்நாடு

வாகனங்கள் மோதி நிற்கும் காட்சி

சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 20 பேர் காயம்

Published On 2023-06-02 07:14 GMT   |   Update On 2023-06-02 07:14 GMT
  • விபத்தில் தனியார் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன், லாரி, சரக்குவேன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக்கொண்டன.
  • ஏற்கனவே மெட்ரோ ரெயில் பணி காரணமாக பூந்தமல்லி, கரையான் சாவடி, நசரத்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

பூந்தமல்லி:

பூந்தமல்லி அருகே உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன நெரிசல் மிகுந்து இருக்கும்.

இந்த நிலையில் இன்று காலை 8.45 மணியளவில் ஏராளமான வாகனங்கள் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டு இருந்தன. அப்போது சரக்கு வேன் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வேன் டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதனால் பின்னால் வந்த வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதியது.

இந்த விபத்தில் தனியார் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன், லாரி, சரக்குவேன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக்கொண்டன. இதில் சில வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி நின்றதால் பின்னால் வந்த மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்ற வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். இதன்பின்னர் வாகனங்கள் ஒவ்வொன்றாக மெதுவாக சென்றன. இந்த விபத்தால் சுமார் ஒரு மணிநேரம் பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏற்படவில்லை.

ஏற்கனவே மெட்ரோ ரெயில் பணி காரணமாக பூந்தமல்லி, கரையான் சாவடி, நசரத்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதிகளை தாண்டி வந்தாலும் பெங்களூரு நெடுஞ்சாலையில் இதுபோன்று அடிக்கடி விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News