தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2022-06-21 06:52 GMT   |   Update On 2022-06-21 06:52 GMT
  • செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
  • செம்பரம்பாக்கம் ஏரி கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ளம் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் தற்போது 23.48 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் 3,509 மில்லியன் கன அடி நீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏரிக்கு 550 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

கிருஷ்ணா நதிநீர் வரத்தால் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடி எட்டும் நிலையில் உள்ளது.

வழக்கமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தாண்டினால் உபரி நீர் திறந்து விடுவது வழக்கம்.

தற்போது பெய்து வரும் கனமழையை கருத்தில்கொண்டு பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீரை அதிகாரிகள் நிறுத்தினர்.

எனினும் ஏரி முழுகொள்ளவை எட்டி வருவதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.

இன்றும் பலத்த மழை இருந்தால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீரை திறந்து விட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரி கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரி சுற்றிலும் போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

கோடை காலத்தில் முதல் முறையாக செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் நிரம்பி திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News