தமிழ்நாடு

ரெயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.56 லட்சம் மோசடி வழக்கில் மத்திய அரசு ஊழியர் மனைவியுடன் கைது

Published On 2023-09-11 08:39 GMT   |   Update On 2023-09-11 08:39 GMT
  • மோசடியில் தேனியை சேர்ந்த முரளி (24) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது.
  • நாகர்கோவிலில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் புதுக்கடை ஐரேனியபுரம் கோணத்துவிளையை சேர்ந்தவர் பிரவிதா (வயது 29). இவர் நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனக்கு ஐரேனிய புரத்தைச் சேர்ந்த அபிஷா (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், தற்போது பெங்களூரு கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஜோயல் தேவா (37) என்பவரை திருமணம் செய்து பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அபிஷாவும், அவருடைய கணவர் ஜோயல் தேவாவும், தங்களுக்கு ரெயில்வே துறையில் முக்கிய அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக ரெயில்வேயில் வேலை வாங்கி தர முடியும் என்றும் என்னிடம் கூறினர். ஆனால் வேலை வாங்கித் தர வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறினார்கள்.

இதனை நம்பி நான் ரூ.20 லட்சம் கொடுத்தேன். இதே போல கிள்ளியூர் பண்டாரவிளையை சேர்ந்த பிறைஜா என்பவரிடம் ரூ.10 லட்சமும், முள்ளுவிளையை சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் ரூ.14 லட்சமும், ராஜ்குமார் என்பவரிடம் ரூ.12 லட்சமும் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்கள் வாங்கினர். அந்த வகையில் 4 பேரிடமும் மொத்தம் ரூ.56 லட்சம் வாங்கினார்கள். ஆனால் அவர்கள் கூறியது போல ரெயில்வேயில் வேலை வாங்கித் தரவில்லை. எனவே நாங்கள் பணத்தை திரும்பத் தரும்படி கேட்டோம். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்கவில்லை. வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி மோசடி செய்துவிட்டனர். இந்த மோசடியில் தேனியை சேர்ந்த முரளி (24) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் விசாரணை நடத்தி ஜோயல் தேவா, அவருடைய மனைவி அபிஷா, முரளி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தார். அப்போது சம்பந்தப்பட்ட 3 பேரும் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் தலைமையிலான போலீசார் பெங்களூர் சென்று ஜோயல் தேவா, அபிஷா மற்றும் முரளி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News