இளம்பெண்ணின் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டிய காதலன்- போலீசார் கைது செய்து விசாரணை
- பலமுறை காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் பேசவில்லை.
- அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
திருப்பூர்:
திருப்பூர் பூலுவப்பட்டி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் பஷீர். இவரது மகன் ஷாஜகான் (வயது 26). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயதான இளம்பெண்ணுக்கும் ஷாஜகானுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து அந்த பெண், ஷாஜகானுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார். பலமுறை காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் பேசவில்லை.
காதலை கைவிட்டதால் ஆத்திரமடைந்த ஷாஜகான், காதலியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது காதலை கைவிட்டால் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் இது குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஷாஜகானை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.