அத்திக்கடவு-அவினாசி திட்டம்: நிலம் அளித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் அறிக்கை
- கொங்கு மண்டலத்தில் உள்ள 31 ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 538 நீர்நிலைகளில் நீர் நிரப்பப்படும்.
- நிலம் அளித்தவர்களுக்கு அதிகபட்ச நஷ்டஈடு வழங்கப்படும் என்று அரசு அளித்த வாக்குறுதியின் படி வழங்காமல் காலம் தாழ்த்துகிறது.
சென்னை:
த.மா.கா. கட்சியில் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை, திருப்பூர், ஈரோடு மக்களின் 60 ஆண்டுகால கனவுத் திட்டம் அத்திக்கடவு அவினாசி திட்டம். இத்திட்டம் கடந்த ஆட்சிகாலத்தில் ரூபாய் 1,652 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்டது.
அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்படுவதின் மூலம் கொங்கு மண்டலத்தில் உள்ள 31 ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 538 நீர்நிலைகளில் நீர் நிரப்பப்படும்.
இதன் மூலம் அப்பகுதியில் வாழும் 35 லட்சம் மக்கள் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். அதோடு 1.30 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
இத்திட்டத்திற்கு நிலம் அளித்தவர்களுக்கு அதிகபட்ச நஷ்டஈடு வழங்கப்படும் என்று அரசு அளித்த வாக்குறுதியின் படி வழங்காமல் காலம் தாழ்த்துகிறது.
இதனால் விவசாயிகள் மகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். எனவே தமிழக அரசு அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தாமதம் இல்லாமல் நிறைவேற்ற உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நஷ்டஈட்டை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.