தமிழ்நாடு

தடுப்பூசி போடப்பட்ட 10 மாத பெண் குழந்தை பலி- போலீசார் விசாரணை

Published On 2023-07-20 04:02 GMT   |   Update On 2023-07-20 04:03 GMT
  • அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்து மேலும் நான்கு ஊசிகளை டாக்ட ர்கள் செலுத்தினர்.
  • தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள மடிகை கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27) தொழிலாளி. இவரது மனைவி கீதா.

இவர்களது 10 மாத பெண் குழந்தை தரணிகாவுக்கு 10 வது மாத தடுப்பூசி துறையூர் அங்கன்வாடி மையத்தில் போடப்பட்டது.

ஆனால் தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் குழந்தை கண் அசைவின்றி காணப்பட்டது.

இதையடுத்து காசநாடு புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையை தூக்கிக் கொண்டு பெற்றோர் சென்றனர்.

அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை.

தொடர்ந்து தஞ்சை ராசாமி ராசுதாரர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்து மேலும் நான்கு ஊசிகளை டாக்ட ர்கள் செலுத்தினர்.

ஆனால் சிறிது நேரத்திலே குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.

இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர்களின் கவனக்குறைவு, அஜாக்கிரதையால் தான் குழந்தை உயிர் இழந்தது, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி உடலை வாங்க மறுத்து கோஷங்கள் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் . அப்போது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News