தமிழ்நாடு
கூடலூர் கோத்தர் வயலில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.

கூடலூர், ஊட்டியில் பலத்த மழை- வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

Published On 2022-05-17 03:42 GMT   |   Update On 2022-05-17 03:42 GMT
தொடர் மழையால் கூடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதேபோல், பொன்னானி, சோலாடி ஆறுகளிலும், நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
ஊட்டி:

தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்றும் நீலகிரி மாவட்டத்தில் காலை முதல் நள்ளிரவு வரை, ஊட்டி நகரம், தலைக்குந்தா, லவ்டேல், பிங்கா் போஸ்ட் உள்ளிட்ட இடங்களிலும், புறநகா் பகுதிகளிலும் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் சாலையோரம் நடந்து செல்லும் மக்கள் பாதிப்படைந்தனர். மேலும் ஊட்டி பஸ் நிலைய சாலை, குன்னூர் சாலை உள்பட அனைத்து முக்கிய சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் சென்ற வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றன.

2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த மழையால், சுற்றுலா தலங்களில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியிருந்த விடுதிகளை நோக்கி படையெடுத்தனர்.

கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருப்பினும் அடிக்கடி மிதமான வெயில் நிலவியது.

மதியத்திற்கு பிறகு பலத்த மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையுடன் கருமேகங்களும் சூழ்ந்திருந்ததால், அந்த பகுதியே இருளாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.

தொடர் மழையால் கூடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதேபோல், பொன்னானி, சோலாடி ஆறுகளிலும், நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இந்த மழைக்கு கூடலூர் தோட்டமூலா பகுதியில் உள்ள சுமாா் 15 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றி வெள்ளம் சூழந்திருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தாலேயே மழை வெள்ளம் சூழ்ந்ததாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூரில் இருந்து கோத்தர் வயல் செல்லும் சாலையிலும் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் தண்ணீர் விவசாய நிலத்திற்குள் புகுந்தது.

பந்தலூர் மற்றும் மேங்கோ ரேஞ்ச், உப்பட்டி, பொன்னானி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, சேரம்பாடி, எருமாடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அந்த பகுதிகளில் சாலைகளில் உள்ள குழிகள் அனைத்தும் நிரம்பி குளம் போல காட்சியளித்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்து, அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது.

சேரம்பாடி அருகே உள்ள நெல்லி குன்னுவில் பெய்த மழைக்கு சாமிநாதன் என்பவரின் வீட்டின் பின்புறம் திடீரென மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் மீது விழுந்தது.

அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இன்று காலையும் மாவட்டம் முழுவதும் அவ்வப்போது சாரல் மழையும், கடுமையான குளிரும் நிலவி வருகிறது. தொடர்ந்து சாரல் மழையும், குளிரும் வாட்டி வதைத்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News