செய்திகள்
முருகன்

உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் மீது வழக்குப்பதிவு

Published On 2020-12-04 03:19 GMT   |   Update On 2020-12-04 03:19 GMT
வேலூர் ஜெயிலில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் மீது காவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலூர் :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் முருகன் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிகளின்படி இருவரும் கொரோனா காரணமாக செல்போனில் வீடியோ கால் மூலம் பேசி வருகின்றனர்.

மேலும் முருகன் தனது குடும்பத்தினரிடம் பேசினார். இந்த நிலையில் தனது உறவினர்களுடன் பேச அனுமதிக்க வேண்டும் என அவர் கடந்த 23-ந் தேதியில் இருந்து தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். பழம் மற்றும் தண்ணீர் மட்டுமே சாப்பிட்டு வருகிறார். இதனால் அவர் மிகவும் சோர்வடைந்துள்ளார்.

நேற்று முன்தினம் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. சிறை அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துள்ளார். இதனால் முருகனின் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது. அவரது ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு ஆகியவை தொடர்ந்து பரிசோதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிறைத்துறை சார்பில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன்படி முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

வேலூர் ஜெயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் அவரது உறவினர்களுடன் செல்போனில் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது எதிர்முனையில் இருந்த அவரது உறவினர்கள் வெளிநாட்டில் உள்ள முருகனின் உறவினர் ஒருவருடன் பேச இணைப்பு கொடுத்துள்ளனர். இது சிறை விதி மீறிய செயல் ஆகும். இதைப்பார்த்த சிறைக் காவலர் அதை தடுத்தார். அப்போது முருகனுக்கும், அந்த காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவலரை பணி செய்யவிடாமல் முருகன் தடுத்துள்ளார். எனவே அவர் மீது ஜெயிலர் மோகன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News