செய்திகள்
விபத்து

கண்டெய்னர் லாரி - கார் மோதல்: குழந்தை உள்பட 3 பேர் பலி

Published On 2020-11-13 13:04 IST   |   Update On 2020-11-13 13:04:00 IST
செங்கம் அருகே கண்டெய்னர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கம்:

பண்ருட்டியை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 37). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுகன்யா (35). இவர்களுக்கு சிருஷ்டிகா(5), தேவதர்ஷினி (2) என 2 மகள்கள் இருந்தனர்.

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட நிஷாந்த் முடிவு செய்தார். தனியார் டிராவல்ஸ் கார் மூலம் நேற்று இரவு பெங்களூரில் இருந்து பண்ருட்டிக்கு புறப்பட்டனர்.

காரை பெங்களூரை சேர்ந்த குமார் (34) என்பவர் ஓட்டி வந்தார். அவர்கள் வந்த கார் இன்று அதிகாலை 4 மணிக்கு செங்கம் அடுத்த பாச்சல் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர் திசையில் பாண்டிச்சேரியில் இருந்து பெங்களூருக்கு கண்டெய்னர் லாரி வந்தது. கண்டெய்னர் லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. விபத்தில் கார் டிரைவர் குமார், நிஷாந்த் அவரது மகள் தேவதர்ஷினி ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

நிஷாந்த் மனைவி சுகன்யா, மகள் சிருஷ்டிகா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்து பாச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் இறந்த 3 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளிக்காக சொந்த ஊர் சென்றவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News