செய்திகள்
விபத்து

அரியலூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்- மின்வாரிய பெண் ஊழியரின் கணவர் பலி

Published On 2020-09-10 09:38 GMT   |   Update On 2020-09-10 10:27 GMT
அரியலூரில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் மின்வாரிய பெண் ஊழியரின் கணவர் பலியானார். மேலும் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட வாலிபர் படுகாயம் அடைந்தார்.
அரியலூர்:

அரியலூர் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 30), இவரது மனைவி வேல்விழி (28). இவர் பெரம்பலூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று விஜய் மனைவியை அழைத்துக்கொண்டு அரியலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

மருதையாறு பாலத்தில் சென்றபோது, அரியலூரில் இருந்து வாரணவாசியை நோக்கி சுரேஷ்குமார் (30) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், விஜய் ஓட்டி வந்தமோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி வேல்விழி படுகாயம் அடைந்தார்.

அதேநேரத்தில் சுரேஷ் குமார் தூக்கி வீசப்பட்டு மருதையாற்றின் பாலத்திலிருந்து 20 அடிக்கு கீழே ஆற்றில் விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சுரேஷ்குமார், வேல்விழி ஆகியோரை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News