மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் உரசி சென்ற மோதலில் வாலிபர் படுகொலை
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே அருகே மேலமாப்படுகை கன்னித்தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் விஜய் (23). பாலிடெக்னிக் படிப்பை முடித்து விட்டு, சென்னையில் வேலை பார்த்து வந்தவர் தற்போது உள்ளுரில் வசித்து வந்தார். நேற்று இரவு விஜய் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்குச் சென்றபோது மனோகர் (55) என்பவரின் மீது பைக் உரசியுள்ளது. இதில், விஜய்க்கும், மனோகருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் வீட்டுக்கு சென்ற விஜய் ஆட்களுடன் திரும்பி மனோகர் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் மனோகர் தரப்பைச் சேர்ந்த ஒருவர் விஜயை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விஜய்யின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகர், அவரது சகோதரர் சுந்தர்ராஜ் மற்றும் 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மாப்படுகை கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.