செய்திகள்

செங்கம் அருகே மாதா கோவில் தேரில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

Published On 2019-05-15 05:33 GMT   |   Update On 2019-05-15 05:33 GMT
செங்கம் அருகே மாதா கோவில் தேரில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

செங்கம்:

செங்கம் அருகே உள்ள அல்லியேந்தல் கிராமத்தில் உள்ள தூய லூர்து மாதா கோவில் திருவிழா நடந்தது. நேற்று இரவு மின் அலங்காரம் செய்யப்பட்ட தேர் ஊர்வலம் நடந்தது. பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் தேரை இழுத்து வந்தனர். வழிநெடுகிலும் ஏராளமானோர் வழிபட்டனர்.

வண்ணாரப்பேட்டை தெருவில் வந்தபோது தேரின் உச்சி பகுதி மின் கம்பியில் உரசியது. இதனால் தேரில் மின்சாரம் பாய்ந்தது.

தேரை இழுத்து வந்த அதே ஊரை சேர்ந்த அன்பரசு (50), ஜெபராஜ் (40), ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். பிலோமின் ராஜ் (45) என்பவர் தூக்கி வீசப்பட்டார். அவர் படுகாயம் அடைந்தார். தேரில் தீப்பொறிகள் பறந்தன.

இதனைக்கண்ட பொதுமக்கள் சிதறி ஓடினர். அங்கு கூச்சல், அலறல் சத்தம் ஏற்பட்டது. பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இறந்தவர்கள் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

பாய்ச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பிலோமின் ராஜை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பலியானவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அல்லியேந்தல் கிராமம் சோகத்தில் மூழ்கியது.

பாய்ச்சல் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News