செய்திகள்

அதிமுக ஆட்சியை தினகரனால் தொட்டுக்கூட பார்க்க முடியாது- ஆர்பி உதயகுமார் பேச்சு

Published On 2019-05-11 08:05 GMT   |   Update On 2019-05-11 08:05 GMT
அ.தி.மு.க. ஆட்சியை டிடிவி தினகரனால் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

மதுரை:

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டி நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு அ.தி.மு.க. அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

நாகமலை புதுக்கோட்டை, வடபழஞ்சி, கீழக்குயில்குடி, ஆவியூர் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் முனியாண்டிக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தப்பகுதியில் தினகரன் தேர்தல் பிரசாரம் செய்தபோது இங்கு குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்காது என்றும் பேசி உள்ளார்.

மு.க.ஸ்டாலினும் இது போலத்தான் பேசுகிறார். குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளார். ரூ.10.20 கோடி மதிப்பில் விரைவில் குடிநீர் பணிகள் தொடங்கப்பட உள்ளன. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகளை துரோகிகள் என்கிறார் தினகரன்.

ஜெயலலிதா உருவாக்கித் தந்த ஆட்சியை தி.மு.க.வுடன் இணைந்து கவிழ்க்க துடிக்கிறார் தினகரன். இதனால் தினகரன் தான் உண்மையான துரோகி என்பதை தொண்டர்கள் தெரிந்து கொண்டனர். எனவே அ.தி.மு.க. ஆட்சியை தினகரனால் தொட்டுக்கூட பார்க்க முடியாது.

திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. கோட்டை. இங்கு வெற்றி பெற்றதும் திருப்பரங்குன்றத்தை முதன்மை தொகுதியாக மாற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் பிரசாரத்தில் சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் மண்டலத்தலைவர் சாலைமுத்து, நிர்வாகிகள் வெற்றிவேல், மாரிச்சாமி, முத்து இருளாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News