சென்னையில் மீண்டும் பிளாஸ்டிக் புழக்கம் அதிகரிப்பு- தடை செய்தும் கண்டுகொள்ளவில்லை
சென்னை:
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடைகள், நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்தியது.
இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தினால் ரூ.100 முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டமும் இயற்றப்பட்டது.
சென்னையில் மட்டும் 35 ஆயிரம் கடைகளில் சோதனை நடத்தி 165 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு சார்புடைய நிறுவனங்கள், பெரிய வணிக நிறுவனங்கள் அரசு தடை காரணமாக பிளாஸ்டிக் பைகளை பெரும்பாலும் தவிர்த்து விட்டன.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அதிகாரிகள் கவனம் திசை மாறியது. எல்லோரும் தேர்தல் பணிக்கு சென்றதால் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கண்காணிக்கவில்லை.
இதையடுத்து மீண்டும் சர்வசதாரணமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழங்குகின்றன. தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பைகளை மீண்டும் உற்பத்தி செய்யவும் தொடங்கி விட்டனர். இதனால் மீண்டும் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிய தொடங்கி உள்ளது.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வில்லை.
அதே நேரம் பிளாஸ்டிக் சமூகத்துக்கு தீங்கு விளை விப்பது என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை எல்லோரும் தவிர்க்க வேண்டும்” என்றார்.
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால் தீவிர சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #plasticban #electionofficer