செய்திகள்

வாக்குச்சாவடி மையத்தில் பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்ற திமுக பிரமுகர் கைது

Published On 2019-04-19 11:40 IST   |   Update On 2019-04-19 11:40:00 IST
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வாக்குச்சாவடி மையத்தில் பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்ற தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அக்கிசெட்டிபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டு இருந்தது.

இந்த வாக்குப்பதிவு மையத்தில் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் சசிகலா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் விஜய் (வயது 29) என்பவர் அங்கு வந்து பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதை பார்த்த சசிகலா, வாக்குச்சாவடி அருகே நிற்கக்கூடாது, இங்கிருந்து செல்லுங்கள் என கூறினார்.

அதற்கு விஜய், ஆபாசமாக பேசி தகராறு செய்தார். மேலும் மிரட்டல் விடுத்து தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதையறிந்ததும், சக போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உடனே விஜய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து சசிகலா ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கேசவன் விசாரணை நடத்தி, பெண் போலீசை ஆபாசமான வாத்தையால் பேசியது, அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது, அவமானப்படுத்தி வன்கொடுமை செயலில் ஈடுபட்டது என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஜயை கைது செய்தார்.

பின்னர் போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News