செய்திகள்

பா.ஜனதா- அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்- கனிமொழி எம்பி பிரசாரம்

Published On 2019-03-31 11:36 GMT   |   Update On 2019-03-31 11:36 GMT
பா.ஜனதா- அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஆறுமுகநேரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்பி பேசியுள்ளார். #Kanimozhi #bjp #admk

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் கனிமொழி எம்.பி. பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்களிடையே தி.மு.க. கூட்டணிக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மத்திய மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கிவிட்டது. இந்த நாட்டின் பாதுகாவலன் என்று மோடி சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஆனால் அவரால் ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்த ஆவணங்களை கூட பாதுகாத்துக் கொள்ள இயல வில்லை.

இவரது ஆட்சிக் காலத்தில் தான் நமது நாட்டின் 400-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை எதிர் நாட்டின் ராணுவத்தினரும் தீவிரவாதிகளும் கொன்றுள்ளனர். இது தான் மோடி பாதுகாவலனாக இருப்பதின் லட்சணம். இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருவதால் அந்த நாடுகளுக்கு வேண்டுமானால் பாதுகாவலான இருக்கலாம்.

மக்களை பிளவுபடுத்தி ஆட்சி நடத்தி வரும் மத்திய பா.ஜ.க ஆட்சியையும், அதன் பினாமியாக நடந்து வரும் தமிழகத்தின் அ.தி.மு.க ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாசரேத் கே.வி.கே சாமி சிலை, சந்தி பஜார் பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி வந்தவுடன் நிச்சயமாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்காக பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். கருணாநிதி ஆட்சியின் போது விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. இப்போது விவசாய கடன், மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளனர். அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும்.

10-வகுப்பு படித்துள்ள 1 கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர் வேலை, 50 லட்சம் மக்களுக்கு மக்கள் நலபணியாளர் வேலை வழங்கப்படும். பெண்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு ரூ. 50 ஆயிரம் வட்டியில்லாத கடன் வழங்கப்படும். தி.மு.க. சொன்னதை செய்யும்.

இவ்வாறு அவர் பேசினார். #Kanimozhi #bjp #admk

Tags:    

Similar News