செய்திகள்

இந்தியாவை பாதுகாக்கும் கதாநாயகன் பிரதமர் மோடி- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2019-03-28 10:19 IST   |   Update On 2019-03-28 10:19:00 IST
இந்தியாவை பாதுகாக்கும் கதாநாயகன் பிரதமர் மோடி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். #TNMinister #RajendraBalaji #PMModi
ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதனை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். உதயநிதி ஸ்டாலின் மோடியை வில்லன் என்று கூறி உள்ளார். அவருக்கு வேண்டுமானால் வில்லனாக தெரியலாம். ஆனால் இந்தியாவை பாதுகாக்கும் கதாநாயகன் மோடி. நாட்டுக்கு பிரச்சனை என்றால் அதை தீர்க்கும் ஸ்டண்ட் மாஸ்டர் அவர். சமூக விரோதிகளுக்கு தான் மோடி வில்லன்.

ராகுல்காந்தி வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கை மோசடியானது. கனிமொழியின் தாயார் தனது மகள் ஜெயிக்க வேண்டும் என்று கோவிலுக்கு சென்றிருப்பது பாராட்டுக்குரியது. மு.க.ஸ்டாலின் கவுன்சிலர் பதவிக்கு நிற்ககூட தகுதியில்லை என்று கூறியவர் வைகோ.

ஆனால் தற்போது மு.க.ஸ்டாலினுடன்தான் வைகோ கூட்டணி வைத்துள்ளார். தி.மு.க. போட்ட வழக்கில்தான் ஜெயலலிதா மனஉளைச்சல் அடைந்தார். அவரது இறப்புக்கு தி.மு.க.வும் காரணம்.

தினகரன் அனுதாபத்தால் ஓட்டு வாங்க முடியாது. அவர் சர்வாதிகாரிபோல் நடந்து கொள்கிறார். அ.தி.மு.க.வை யாரிடமும் அடகு வைக்கவில்லை. அ.தி.மு.க. தான் ஆளப்போகிறது. தி.மு.க. அதை பார்க்கப்போகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.  #TNMinister #RajendraBalaji #PMModi
Tags:    

Similar News