கிரிக்கெட் (Cricket)

இந்தியாவில் முதல் முறையாக 50 கோடி பார்வைகளை கடந்த டி20 உலகக் கோப்பை தொடர்- ஜெய்ஷா பெருமிதம்

Published On 2026-03-04 13:24 IST   |   Update On 2026-03-04 13:24:00 IST
  • இந்திய ரசிகர்கள் விளையாட்டு மீது காட்டும் எல்லையற்ற அன்பே இத்தகைய சாதனைகளுக்குக் காரணம்.
  • நாக் அவுட் போட்டிகளிலும் ஆதரவு தெரிவித்து மேலும் புதிய சாதனைகள் படைக்க இந்திய ரசிகர்கள் துணை இருக்க வேண்டும்.

மும்பை:

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 2-வது அரை இறுதிபோட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் 2026 டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய சாதனை படைத்துள்ளதாகத் ஐசிசி தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்தியாவில் மட்டும் இந்தத் தொடரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 500 மில்லியனை (50 கோடி) கடந்துள்ளது. இது இதுவரை நடந்த அனைத்து டி20 உலகக் கோப்பைகளையும் விட அதிகப்படியான பார்வைகளாகும்.

நேரலை ஒளிபரப்பில் டிஜிட்டல் தளம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு போட்டியை ஒரே நேரத்தில் 6.05 கோடி (60.5 Million) பேர் நேரலையில் பார்த்தது உலக சாதனையாகப் பதிவாகியுள்ளது.

இந்தத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியை மட்டும் சுமார் 16.3 கோடி பேர் டிஜிட்டல் தளத்தில் கண்டு களித்துள்ளனர்.

ஐசிசி-யின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் வீடியோக்களின் எண்ணிக்கை 10 பில்லியன் பார்வைகளைத் தாண்டியுள்ளது. இது 2024-ஆம் ஆண்டு பதிவான 16 பில்லியன் என்ற சாதனையைத் தகர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஜெய் ஷா கூறியதாவது:-

டி20 உலகக் கோப்பை 2026 தொடரை உலகளவில் அனைவரும் அணுகக்கூடிய ஒரு நிகழ்வாக மாற்ற வேண்டும் என்ற எங்களது இலக்கு நிறைவேறியுள்ளது. இந்திய ரசிகர்கள் விளையாட்டு மீது காட்டும் எல்லையற்ற அன்பே இத்தகைய சாதனைகளுக்குக் காரணம்.

நாக் அவுட் போட்டிகளிலும் ஆதரவு தெரிவித்து மேலும் புதிய சாதனைகள் படைக்க இந்திய ரசிகர்கள் துணை இருக்க வேண்டும் என கூறினார்.

Tags:    

Similar News