செய்திகள்

சேலத்தில் திருமணமான 4 மாதத்தில் அழகு கலை நிபுணர் தற்கொலை

Published On 2019-02-23 04:49 GMT   |   Update On 2019-02-23 04:49 GMT
சேலத்தில் திருமணமான 4 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.
சேலம்:

சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது26). சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு ஐ.டி.கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

தாரமங்கலத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 26). அழகு கலை படித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அம்மாப்பேட்டை காமராஜர் காலனி பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தற்போது வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அந்த அப்பார்ட்மெண்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ரஞ்சிதா இறந்து கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதியினர் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அப்போது ரஞ்சிதா 3 மாத கர்ப்பிணியாக இருந்ததும், சில நாட்களுக்கு முன்பு அபார்‌ஷன் ஆனதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த ரஞ்சிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். திருமணம் ஆகி 4 மாதமே ஆவதால் அருண்குமார் மற்றும் ரஞ்சிதா உறவினர்களிடமும் அந்த பகுதியிலும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துகிறார்.
Tags:    

Similar News