செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாளை ஆஜராக வேண்டும்- மதுரை ஐகோர்ட் உத்தரவு

Published On 2019-01-29 09:08 GMT   |   Update On 2019-01-29 09:08 GMT
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாளை ஆஜராக வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFiring #MaduraiHCBench
மதுரை:

தூத்துக்குடியை சேர்ந்த மோகன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் பொதுமக்கள் ஊர்வலம் நடத்தினர். அப்போது போலீசார் ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அருணா ஜெகதீஷ் ஆணையம் விசாரணை செய்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் பொய் வழக்குகளை பதிந்து துன்புறுத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடி பொது மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.

ஒரு மனிதன் தனது உரிமையை பெற போராடலாம் என சட்ட உரிமை கூறுகிறது. ஆனால் தூத்துக்குடி வட்டாரத்தில் கடந்த 3 மாதங்களாக பொதுகூட்டம், ஆர்ப்பாட்டம், விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட எவற்றிற்குமே போலீசார் அனுமதி தருவதில்லை.

போராட்டம் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி கோருபவர்களை தேவையின்றி அழைக்கழிக்கபடுவதுடன் போலீசார் தொந்தரவு செய்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சி.பி.ஐ., அருணா ஜெகதீஷ் ஆணையத்திடம் சாட்சி கூறுபவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்கின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சி.பி.ஐ., அருணா ஜெகதீஷ் ஆணையத்திடம் சாட்சி கூறிய சந்தோஷ்ராஜ் என்பவர் மீது போலீசார் பல பொய் வழக்குகளை பதிந்துள்ளனர். தூத்துக்குடி போலீசார் சட்டபடி முறையாக நடக்கவில்லை. தூத்துக்குடியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 24 மணி நேரமும் வக்கீல் குழு பணியில் இருக்க சட்ட உதவிமையத்தின் உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.

15.8.2018 முதல் 15.1.2019 வரை தூத்துக்குடியில் கைது செய்யபட்டவர்களுக்காக மூத்த வக்கீல் அடங்கிய குழுவினை தாலுகா அளவில் அமைக்க மாவட்ட சட்ட உதவி மையத்திற்கு வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிந்து, சட்டவிரோதமாக கைது செய்வதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 3 மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டம் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி கோரியவர்கள் எவ்வளவு? எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாளை (30-ந்தேதி) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கினை நாளை (30-ந் தேதிக்கு) ஒத்திவைத்தினர். #ThoothukudiFiring #MaduraiHCBench
Tags:    

Similar News