செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற காரைக்குடி பெண் போலீசுக்கு மதுரையில் தீவிர சிகிச்சை

Published On 2018-12-31 12:25 IST   |   Update On 2018-12-31 12:25:00 IST
வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் போலீசுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருபவர் சாவித்திரி (வயது34). இவரது கணவர் முருகப்பன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் தனது 10 வயது மகள் அபிநயாவுடன் சாவித்திரி வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக சாவித்திரி விரக்தியுடன் காணப்பட்டார். வாழ்க்கையில் வெறுப்படைந்த சாவித்திரி நேற்று இரவு தனது மகளை தேவகோட்டையில் உள்ள தாய் வீட்டில் விட்டு விட்டு காரைக்குடிக்கு வந்தார்.

பின்னர் தனது வீட்டில் அவர் வி‌ஷம் குடித்து சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் அங்கு வர சாவித்திரி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் சாவித்திரியை காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சாவித்திரி வீட்டை சோதனை செய்ததில் தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியதாக தெரிகிறது. அதில் இருந்த விவரங்கள் தெரியவில்லை.

மேல் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக பெண் போலீஸ் சாவித்திரி தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது குடும்ப பிரச்சினையில் இந்த முடிவை எடுத்தாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News