செய்திகள்

அரியலூர் அருகே மது வாங்கி தருமாறு தகராறில் ஈடுபட்ட நண்பனை கொலை செய்து நாடமாடிய வாலிபர் கைது

Published On 2018-12-28 04:43 GMT   |   Update On 2018-12-28 04:43 GMT
அரியலூர் அருகே நண்பனை கொன்று நாடகமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் கோவிந்தசாமி (வயது 29). இவர் கடந்த 24-ந்தேதி இரவு ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் சாலையில், ராங்கியம் கிராமப்பகுதியில் தலையில் காயத்துடன் சாலையில் கிடந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தசாமியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி இறந்தார்.

இந்தநிலையில் கோவிந்த சாமியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதே பகுதியை சேர்ந்த வேணு கோபால் மகன் வேல்முருகன் (26) மற்றும் சிலர் கோவிந்த சாமியை கொலை செய்ததாகவும் அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆண்டிமடம் போலீசார் வேல்முருகனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோவிந்தசாமியை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

கோவிந்தசாமியும், வேல் முருகனும் நண்பர்கள். சம்பவத்தன்று மது வாங்கி தருமாறு கோவிந்தசாமி, வேல் முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் வாங்கி கொடுக்க மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வேல் முருகன் இரும்பு கம்பியால் கோவிந்தசாமியின் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் அவர் காயம் அடைந்து மயக்கம் அடைந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரிடம், வேல்முருகன், கோவிந்தசாமியின் முகவரியை கூறியதோடு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவித்து விட்டு தலைமறைவாகி விட்டார்.

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி இறந்துள்ளார். போலீசார் விசாரணையில் வேல்முருகன் சிக்கிக் கொண்டார். அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனை கொன்று வாலிபர் நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News