செய்திகள்

பா.ம.க.வுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை- காடுவெட்டி குரு தாயார் பேட்டி

Published On 2018-12-23 10:49 GMT   |   Update On 2018-12-23 10:49 GMT
சிலர் எங்களுக்கு மிரட்டல் விடுவதால் பா.ம.க.வுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காடுவெட்டி குரு தாயார் கல்யாணி அம்மாள் தெரிவித்துள்ளார். #kaduvettiguru #pmk

குத்தாலம்:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் நினைவஞ்சலி நிகழ்ச்சி, வி.ஜி.கே.மணிகண்டன் தலைமையில் இன்று மதியம் நடைபெற்றது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள், மகன் கனலரசன், தங்கை செல்வி, மருமகன் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக காடுவெட்டியின் தாயார் கல்யாணி அம்மாள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மயிலாடுதுறையில் நடைபெறுகிற படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளோம். குருவின் மறைவுக்கு பிறகு அவருக்கு மணிமண்டபம் கட்டித்தருகிறேன் என்று சொன்னார்கள். எங்களுக்கு உள்ள ரூ.1½ கோடி கடனை அடைத்து விட்டு மணிமண்டபம் கட்டுங்கள் என்று சொன்னோம். ஆனால் கடனை அடைக்காமல், ஆட்களை வைத்து எங்களை தாக்கி விட்டனர். எனது மருமகளை எங்களிடமிருந்து பிரித்துவிட்டனர். ஊரில் சிலர் எங்களை மிரட்டி வருகின்றனர். இப்போது கட்சிக்கும் (பா.ம.க.) எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. கட்சியுடனான தொடர்பு எனது மகனுடன் முடிந்துவிட்டது. கட்சியில் சேர்ந்ததால் தான் எனது மகன் உயிருக்கே ஆபத்து வந்தது. சரியான வைத்தியம் செய்திருந்தால் குருவை காப்பாற்றி இருக்கலாம். மருத்துவமனையில் ரூ.35 லட்சம் செலவு செய்து சிகிச்சை அளித்தார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #kaduvettiguru #pmk

Tags:    

Similar News