செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி விடுதியில் பிளஸ்-1 மாணவி தற்கொலை

Published On 2018-12-12 05:22 GMT   |   Update On 2018-12-12 05:22 GMT
உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி விடுதியில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி. டிரைவர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் லாவண்யா (வயது 16).

இவர் உளுந்தூர்பேட்டையை அடுத்த எ.குமாரமங்கலத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அங்குள்ள தங்கும் விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

சனி, ஞாயிறு விடுமுறையில் வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை பள்ளிக்கு சென்று, அங்கு அரையாண்டு தேர்வு எழுதினார்.

தேர்வு முடிந்ததும் தனது அறைக்கு சென்ற மாணவி லாவண்யா மதிய உணவு சாப்பிட வரவில்லை. இதனால் அவரது தோழிகள் லாவண்யாவை தேடி அவரது அறைக்கு சென்றனர். அங்கு லாவண்யா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி பள்ளிக்கு மாணவிகள் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் விடுதிக்கு விரைந்து வந்தனர். ஆசிரியர்கள் உதவியுடன் லாவண்யாவை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லாவண்யா இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீது வழக்குப்பதிவு செய்து மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News