செய்திகள்
விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்-டேங்கர் லாரி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

திண்டிவனம் அருகே டேங்கர் லாரி மீது பஸ் மோதல்- தொழிலாளி பலி

Published On 2018-12-12 04:54 GMT   |   Update On 2018-12-12 04:54 GMT
திண்டிவனம் அருகே இன்று அதிகாலை டேங்கர் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டிவனம்:

தென்காசியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு சென்னை நோக்கி புறப்பட்டது.

அந்த பஸ் இன்று அதிகாலை 5.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த சாரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

அந்த பஸ்சுக்கு முன்னால் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முந்தி செல்வதற்காக ஆம்னி பஸ் டிரைவர் முயன்றார்.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதியது. இதைத்தொடர்ந்து டேங்கர் லாரியும், ஆம்னி பஸ்சும் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தன.

இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி மாரிமுத்து (வயது 43) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் விபத்தில் பலியான மாரிமுத்துவின் தாய் லட்சுமி (65), திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பெத்த நாடார்பட்டியை சேர்ந்த அன்பழகன் (33) உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சம்பவம் நடந்த இடத்துக்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி மற்றும் ஆம்னி பஸ்சை மீட்கும் பணி நடந்து வருகிறது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News