செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி வீட்டு நாயை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது

Published On 2018-11-29 11:59 GMT   |   Update On 2018-11-29 11:59 GMT
செங்கோட்டை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி வீட்டு நாயை வெட்டிக்கொன்ற வாலிபர் மற்றும் 2 நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கரிசல்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கார்த்திக் (வயது22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பிளஸ்-2 மாணவியை காதலித்து உள்ளார். இதற்கு மாணவி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த பிரச்சினையால், மாணவியின் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அவரை திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனி வேலைக்கு அனுப்பினர். இது தொடர்பாக மாணவியின் சித்தப்பா ராமர் (35) என்பவர் கார்த்திக் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம் காதல் விவகாரத்தை கூறி சத்தம் போட வலியுறுத்தி உள்ளார்.

இது கார்த்திக்குக்கும் அவரது நண்பர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று கார்த்திக், அவரது நண்பர்கள் கோதண்ட ராமன் (23), செந்தில் முருகன் (19) ஆகிய 3 பேரும் ராமர் வீட்டுக்கு சென்று அவதூறாக பேசி அவரை தேடினார்கள். அப்போது வீட்டில் ராமர் இல்லை. அவர் வளர்த்த நாய் இவர்களை பார்த்து குரைத்தது.

இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் அரிவாளால் நாயை சரமாரி வெட்டிக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து ராமர் செங்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், கோதண்ட ராமன், செந்தில் முருகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News