செய்திகள்

பள்ளிக்கரணை அருகே பட்டாசு வெடிக்கும் தகராறில் வாலிபர் வெட்டி கொலை

Published On 2018-11-07 14:01 IST   |   Update On 2018-11-07 14:01:00 IST
பள்ளிக்கரணை அருகே பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பள்ளிக்கரணை:

பள்ளிக்கரணை அருகே உள்ள நூக்கம்பாளையம், எழில் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சேட்டு. இவரது மகன் சந்தீப்குமார் (வயது 20), மயிலாப்பூரில் உறவினருடன் சேர்ந்து தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வந்தார்.

தீபாவளியையொட்டி குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு ஏராளமானோர் பட்டாசு வெடித்தனர். இதில் சந்தீப்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒரு வாலிபரை சந்தீப்குமார் தாக்கியதாக தெரிகிறது. உடனே அங்கிருந்தவர்கள் மோதலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சந்தீப்குமார் அதே பகுதியில் தனியாக நின்று கொண்டு இருந்தார். அப்போது 34 பேர் கும்பல், கத்தி, அரிவாளுடன் அங்கு வந்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தீப்குமார் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனால் விரட்டிச் சென்ற கும்பல் அருகில் உள்ள காலி மைதானத்தில் சந்தீப்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.

கழுத்து, மார்பில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சந்தீப்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News