செய்திகள்
பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

கடலூர் அருகே வாலிபர் அடித்து கொலை- போலீசார் விசாரணை

Published On 2018-11-01 15:00 IST   |   Update On 2018-11-01 15:00:00 IST
கடலூர் அருகே முகத்தில் காயத்துடன் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:

கடலூர் அருகே கோண்டூர் பகுதி உள்ளது. இங்குள்ள சாலையோரம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டனர். பிணமாக கிடந்தவர் முகத்தில் காயங்கள் காணப்பட்டது. மேலும் அவர் பேண்ட் மற்றும் சட்டை அணிந்திருந்தார். அங்கு நின்ற பொது மக்களிடம் இறந்து கிடந்தவர் யார் என்று போலீசார் கேட்டனர். இறந்தவர் எங்கள் பகுதியை சேர்ந்தவர் இல்லை என்றும், அவர் யார் என்று தெரியாது என்றும் பொதுமக்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

வாலிபரின் முகத்தில் காயங்கள் இருப்பதால் அவரை யாராவது கடத்தி சென்று அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை சாலையோரம் வீசி சென்றார்களா? அல்லது வாகனம் மோதி அவர் இறந்தாரா? பிணமாக கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முகத்தில் காயத்துடன் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News