செய்திகள்

சாத்தான்குளத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை

Published On 2018-10-31 04:50 GMT   |   Update On 2018-10-31 04:50 GMT
சாத்தான்குளத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பத்திர காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி அம்சம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தற்போது அம்சம்மாள் கர்ப்பிணியாக உள்ளார். அவர் பிரசவத்துக்காக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மணிகண்டன் தசரா குழுவில் இருந்தார். தசரா குழு வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மந்திரம் மகன் மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் இருந்து அருகில் உள்ள மற்றொரு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தார்.

இதனிடையே தனது மகனுக்கு மணிகண்டனால் ஆபத்து இருப்பதாக ஆட்டோ டிரைவர் மணிகண்டனின் தாய் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் தனது மாமனார் ஊரான ஸ்ரீவைகுண்டத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

சமீபத்தில் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் மீண்டும் சாத்தான்குளத்துக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் அங்குள்ள பஜாரில் கடையில் புரோட்டா வாங்க சென்றார். அப்போது அங்கு மந்திரம் மகன் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேர் அங்கு வந்தனர்.

அவர்கள் திடீரென ஆட்டோ டிரைவர் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனால் அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். எனினும் அவர்கள் ஓட ஓட விரட்டி சென்று மணிகண்டனை வெட்டினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இந்த சம்பவம் காரணமாக பஜாரில் பரபரப்பும், பதட்டமும் உண்டானது. அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு சாத்தான்குளம் டி.எஸ்.பி. பாலச்சந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிந்தனர். தப்பி ஓடி தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News