செய்திகள்

இலங்கை அருகே மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு

Published On 2018-10-28 11:31 GMT   |   Update On 2018-10-28 11:31 GMT
இலங்கை அருகே மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரி கூறியுள்ளார். #Rain

சென்னை:

சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை கடந்த வாரமே முற்றிலும் வாபஸ் ஆன நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக கிழக்கு திசை காற்று வீசத் தொடங்கினாலும் அது இன்னும் வலுப்பெறவில்லை. இதனால் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தென் மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்த வரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணிநேரத்தில் குமரி மாவட்டம் தக்கலை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மணமேல்குடி, மயிலாடி, வேதாரண்யம், கன்னியாகுமரியில் தலா 1 செ.மீ மழை பெய்துள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.

அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு மத்திய மற்றும் வட மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக ஒடிசா கடற்கரை பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Rain

Tags:    

Similar News