செய்திகள்

7ந்தேதி பலத்த மழை எச்சரிக்கை எதிரொலி- திருப்பரங்குன்றத்தில் தினகரன் பொதுக்கூட்டம் ரத்து

Published On 2018-10-05 06:39 GMT   |   Update On 2018-10-05 06:39 GMT
பலத்த மழை எச்சரிக்கை காரணமாக திருப்பரங்குன்றத்தில் 7-ந்தேதி நடக்க இருந்த தினகரன் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. #TTVDhinakaran
மதுரை:

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகளில் அ.தி.மு.க.வுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழமும் தீவிர பணியாற்றி வருகிறது.

ஆர்.கே.நகரில் அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சி தகவல்கள் கொடுத்தது போல அ.தி.மு.க. கோட்டை என்று கருதப்படும் திருப்பரங்குன்றத்திலும் அதிசயத்தை நடத்திக்காட்ட தினகரன் புதிய வியூகங்களை வகுத்து வருகிறார்.

இதற்காக வருகிற 7-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டம் நடத்த அ.ம.மு.க. முடிவு செய்தது. அதில் துணை பொதுச் செயலாளர் தினகரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக இருந்தது.

இதற்காக திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் அருகே சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதிக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் விண்ணப்பித்தனர். ஆனால் போலீசார் அனுமதி தரவில்லை.

இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனாலும் போலீஸ் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனிடையே 7-ந் தேதி பலத்த மழை பெய்யும் என்று “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளதால் பொதுக்கூட்டத்தை ரத்து செய்யும்படி கட்சி நிர்வாகிகளுக்கு தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் 7-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் தினகரன் பங்கேற்பதாக இருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பின்னர் மறுதேதியில் கூட்டம் நடத்த அ.ம.மு.க. நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். #TTVDhinakaran
Tags:    

Similar News