செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Published On 2018-09-17 12:00 GMT   |   Update On 2018-09-17 12:00 GMT
சிதம்பரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பண்ருட்டியில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #PMK #AnbumaniRamadoss
பண்ருட்டி:

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொள்ளுக்காரன் குட்டை பகுதியில் உள்ள தேசிங்கு நினைவு இடத்தில் வன்னியர் சங்கம் சார்பில் இன்று நடந்தது.

இதில் முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி தேசிங்கு குடும்பத்துக்கு அன்புமணி ராமதாஸ் நிவாரண உதவி வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் தற்போது மின்தட்டுப்பாடு உள்ளது. இதற்கு காரணம் ஊழல்தான். அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையங்களை ஆட்சியாளர்கள் செயலிழக்க செய்து விட்டனர்.

தற்போது தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கும் முயற்சியில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கமி‌ஷனுக்காகவும், ஊழலுக்காகவும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது எல்லா துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. ஊழலில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளை உடனடியாக பதவியில் இருந்து விலக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர் மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு கட்சியில் பதவி உயர்வு கொடுத்தது கண்டிக்கத்தக்கது.

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் பயப்படுகிறார். ஏனென்றால் அவர் மீது நடவடிக்கை எடுத்தால் முதல்-அமைச்சர் செய்யும் ஊழல் வெளிபடும் என பயப்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார். #PMK #AnbumaniRamadoss
Tags:    

Similar News