செய்திகள்
மாயமான மலேசிய பெண் புவனா

மேட்டுப்பாளையத்தில் கணவருடன் சுற்றுலா வந்த மலேசிய பெண் மாயம்

Published On 2018-08-10 04:35 GMT   |   Update On 2018-08-10 04:35 GMT
மேட்டுப்பாளையத்தில் கணவருடன் சுற்றுலா வந்த மலேசிய பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:

மலேசியா சங்கைப்பட்டாணிகெடா, தாமன்டேசா ஜெயா பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன்(34). சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனா(34). அங்குள்ள கூரியர் சர்வீஸ் அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றார். இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பிரகதி(9) ஜனனி (6) என்ற 2 மகள்கள் உள்ளார்கள்.

இந்த நிலையில் கணவன் மனைவி 2 பேரும் தமிழகத்தை சுற்றிப்பார்க்க கடந்த 2-ந்தேதி மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.

சென்னையில் தங்கியிருந்த அவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று விட்டு கடந்த 8-ந்தேதி ஊட்டி செல்வதற்காக இரவு 11.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து காரமடை ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

இதனையடுத்து நேற்று காலை 7.30 மணிக்கு சிவனேசன் எழுந்து பார்த்த போது தனது மனைவி புவனாவைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் விடுதி மற்றும் அக்கம்பக்கம் விசாரித்தும், தேடியும் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. அவர் விடுதியில் இருந்து கைப்பை, பாஸ்போர்ட், செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து சிவனேசன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய பெண் மாயமான சம்பவம் மேட்டுப்பாளையம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News