மன்னார்குடியில் அரசு பஸ்கள் ஓடவில்லை
தஞ்சாவூர்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதாவிற்கு எதிராகவும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள், அனைத்து தொழிற்சங்கங்கத்தினர் இன்று ஒரு நாள் மட்டும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், ஆட்டோ, டெம்போவேன், வாடகை கார் என சாலை போக்குவரத்து துறையில் சம்மந்தப்பட்டுள்ள தொழிலாளர்கள், உரிமையாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதனால் பல்வேறு இடங்களில் வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஆனால் டெல்டா மாவட்டங்களில் வழக்கம் போல் வாகன போக்குவரத்து சீராக உள்ளது. இதனால் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தஞ்சை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் வழக்கம் போல் அரசு பஸ்கள் இயங்கின. இதேபோல் ஆட்டோக்கள், வேன்கள் இயங்கப்பட்டன. இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தஞ்சையில் இன்று காலை சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணியில் ஆட்டோ, வேன் ஓட்டுனர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் வாகனங்களுடன் கலந்து கொண்டு பேரணியில் ஈடுபட்டனர்.
கும்பகோணத்தில் இன்று அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கியது. ஆனால் லாரிகள், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் சில இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்திலும் இன்று அரசு பஸ்கள், ஆட்டோக்கள், லாரிகள் வழக்கம் போல் இயங்கின.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் மொத்தம் 84 பஸ்கள் உள்ளன. இதில் இன்று 44 பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த பஸ்கள் அனைத்தும் பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்தன.
பாதி எண்ணிக்கையில் மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் மன்னார் குடியில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
நாகை மாவட்டத்தில் சீர்காழி, வேதாரண்யம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருந்த நிலையில் வழக்கம் போல் அரசு பஸ்கள், ஆட்டோ, வேன், லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது.