செய்திகள்

காரைக்குடியில் கொள்ளையடிக்கப்பட்ட ஹவாலா பணம் மீட்பு

Published On 2018-06-23 06:21 GMT   |   Update On 2018-06-23 06:21 GMT
காரைக்குடியில் கொள்ளையடிக்கப்பட்ட ஹவாலா பணத்தை மீட்ட போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #HawalaMoney

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காந்திபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் சுப்பிரமணி (வயது 47).

காரைக்குடி பர்மா பஜாரில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ள இவர், வடக்கு போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், உறவினர் சிட்டாள் ஆச்சி என்பவரிடம் ரூ.40 லட்சம் கொடுத்து வைத்திருந்தேன். அதனை எனது கார் டிரைவர் நாராயணன் (51) ஏமாற்றி திருடிச் சென்று விட்டார் எனக்குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நாராயணன், பணப்பையை தனது உறவினர் செல்வராஜிடம் கொடுத்ததும் அவர் அதனை தனது நண்பரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேகரிடம் கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து 3 பேரையும் பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்த பணப்பையை மீட்டனர். அந்தப்பையில் ரூ.2 கோடியே 25 லட்சம் மற்றும் வெளிநாட்டு பணம் இருப்பது தெரியவந்தது. ரூ.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக சுப்பிரமணி கூறிய நிலையில், ரூ.2¼ கோடி இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போது, அது ஹவாலா பணம் என தெரியவந்தது.

வெளிநாட்டு பொருட்களை விற்று வந்த சுப்பிரமணி, அனுமதியின்றி வெளிநாட்டு பணத்தையும் மாற்றிக்கொடுத்து வந்துள்ளார். அந்த பணத்தை தான் அவர் உறவினர் வீட்டில் மறைத்து வைத்திருந்தாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

சுப்பிரமணி ஹவாலா மோசடியில் ஈடுபட்டதால், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை குறைத்து கூறினாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #HawalaMoney

Tags:    

Similar News