செய்திகள்

இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றிய காதலன் கைது

Published On 2018-06-15 18:18 IST   |   Update On 2018-06-15 18:18:00 IST
காதலியை ஏமாற்றிவிட்டு தலைமறைவாக இருந்து சிக்கிய வாலிபர், கைது நடவடிக்கைக்கு பயந்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே உள்ள அய்தம்பட்டு ஈச்சந்தோப்பை சேர்ந்த செல்வக்குமார் (வயது 28). இவர், ஆம்பூரில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இதே கம்பெனியில், ஆம்பூர் சின்ன வரிகத்தை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணும் வேலை செய்தார்.

இவர்களுக்குள், காதல் மலர்ந்தது. 5 ஆண்டுகளாக காதலித்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அந்த இளம்பெண்ணிடம் செல்வக்குமார் உல்லாசமாக இருந்தார்.

இதையடுத்து, திடீரென கடந்த மாதம் செல்வக்குமார் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். பெற்றோரும் பெண் பார்த்தனர். இதையறிந்த காதலி, செல்வக்குமாரிடம் தகராறு செய்தார்.

‘உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது. முடிந்தை பார்த்துக்கொள் என்று காதலியிடம் செல்வக்குமார் திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் மனமுடைந்த காதலி, ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணைக்கு பயந்து, செல்வக்குமார் தலை மறைவானார். ஒரு மாதமாக அவர் வீட்டிற்கு வரவில்லை. மகன் காணவில்லை என செல்வக்குமாரின் தந்தை, உமராபாத் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தலை மறைவாக இருந்த செல்வக் குமார், காதலிக்கு நேற்று திடீரென போன் செய்தார். ‘நான் ஜோலார்பேட்டையில் இருக்கிறேன். உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். வீட்டில் இருக்கும் பணம், நகைகளை எடுத்து கொண்டு வா...நான் உனக்காக காத்திருக்கிறேன்’’ என்றார்.

இதுகுறித்து, காதலி தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் அனைத்து மகளிர் போலீசாரிடம் தெரிவித்தார். செல்வக்குமாரை பிடிக்க அவர்களும் இளம்பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம், 10 பவுன் நகை கொடுத்து ஜோலார் பேட்டைக்கு அனுப்பினர்.

பெற்றோர், போலீசாரும் பின்தொடர்ந்தனர். ஜோலார் பேட்டை ரெயில் நிலையம் அருகே காத்திருந்த செல்வக்குமாரை, நகை-பணத்துடன் சென்ற காதலி சந்தித்தார்.

அப்போது, காதலியிடம் இருந்த நகை-பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார். அங்கு இருந்த போலீசார், செல்வக்குமாரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், தலைமறைவாக இருப்பதால் செலவுக்கு பணம் இல்லை.

இந்த நிலைக்கு காரணமான, காதலியிடம் நகை, பணத்தை பறிக்க திட்டமிட்டு வர வழைத்ததாக செல்வக்குமார் கூறினார். ‘சரி நடந்ததெல்லாம் போகட்டும் காதலியை திருமணம் செய்து கொள்’ என்று போலீசார் தெரிவித்தனர்.

திருமணத்திற்கு செல்வக்குமார் மறுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டினர். இதையடுத்து, செல்வக்குமார் திருமணத்திற்கு சம்மதித்தார்.

இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செல்வக்குமாருக்கும், அவரது காதலிக்கும் திருமணம் நடக்கிறது. இதற்காக அவர்கள் நள்ளிரவே அழைத்து செல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் நள்ளிரவு வரை பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News