செய்திகள்
விபத்தில் பலியான சரத்குமார்-ஜெயபிரதா

பனப்பாக்கம் அருகே பைக் விபத்தில் காதல் ஜோடி பலி

Published On 2018-06-06 10:55 IST   |   Update On 2018-06-06 10:55:00 IST
பனப்பாக்கம் அருகே பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய பைக்கில் சென்ற காதல் ஜோடி விபத்தில் சிக்கி இறந்தனர்.
பனப்பாக்கம்:

வேலூர் மாவட்டம் நெமிலி அருகே உள்ள வடகண்டிகை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் இவரது மகன் சரத்குமார் (வயது 20). அதே பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த கல்லூரியில் அசநெல்லிகுப்பம் இரட்டை மலை சீனிவாசன் தெருவை சேர்ந்த ஜெயபிரதா (20). என்பவர் படித்து வந்தார். ஒரே வகுப்பில் படித்த இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஜெயபிரதா குடும்பத்தினர் கடும் எதிப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சோளிங்கரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு சரத்குமார், ஜெயபிரதாவை அவரது வீட்டில் இருந்து பைக்கில் அழைத்து கொண்டு பாணாவரம் வழியாக சோளிங்கருக்கு சென்று கொண்டிருந்தார்.

பாணாவரம் அடுத்த மங்கலம் அருகே பைக் சென்ற போது நிலை தடுமாறி சிறிய பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தனர். படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவலறிந்த பாணாவரம் போலீசார் உடலை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News