செய்திகள்

மயிலம் அருகே முதியவரை கத்தியால் குத்திய விவசாயி போலீசுக்கு பயந்து தற்கொலை

Published On 2018-05-21 14:32 GMT   |   Update On 2018-05-21 14:32 GMT
முன் விரோத தகராறில் முதியவரை கத்தியால் குத்திய விவசாயி போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கீழ்தேரடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45), விவசாயி. இவரது மகளை அதே பகுதியை சேர்ந்த சாமுவேல் என்பவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சாமுவேலுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த ஊர் நாட்டாமை சுப்புராயன் (70) என்பவர் பஞ்சாயத்து பேசியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சுப்புராயனுக்கும், செல்வராஜுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு சுப்புராயன் வீட்டு முன்பு தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வராஜ் கத்தியால் சுப்புராயன் உடலில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து கீழே சாய்ந்து கூச்சலிட்டார். இதனை தொடர்ந்து செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சுப்புராயனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தவர்கள் வெளியே ஓடிவந்தனர். அங்கு சுப்புராயன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவரை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சுப்புராயனை கத்தியால் குத்தியதால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என செல்வராஜ் பயந்தார். இன்று அதிகாலை அவர் அதே பகுதியில் தனது அண்ணன் புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலம் இன்ஸ் பெக்டர் பால்சுதர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் பிணமாக தொங்கிய செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News