செய்திகள்

அறந்தாங்கி அருகே மது குடிக்கும் தகராறில் வாலிபர் கொடூர கொலை

Published On 2018-05-20 11:16 GMT   |   Update On 2018-05-20 11:16 GMT
அறந்தாங்கி அருகே நள்ளிரவில் மது குடிக்கும் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆமாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் வீரபத்திரன் என்ற அறிவழகன் (வயது 28). இன்னும் திருமணமாக வில்லை.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவையில் தங்கியிருந்து வீடுகளுக்கு சிமெண்டு மற்றும் பிளாஸ்டிக் கூரை அமைக்கும் பணி செய்து வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்த அவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். பெற்றோர் கண்டித்ததால் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில் செய்தார்.

வழக்கமான ஆமாஞ்சி கிராமத்தில் பெரும்பாலானோர் கூலி வேலை மற்றும் விவசாயம் பார்த்து வந்ததால் இரவு 8 மணிக்கே அனைவரும் தூங்க சென்று விடுவார்கள். அதேபோல் நேற்று இரவு கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த சிவக்குமார் குடும்பத்தினரும் தூங்க சென்றனர்.

வீரபத்திரனும் சாப்பிட்டு விட்டு வீட்டு முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை சிவக்குமார் குடும்பத்தினர் எழுந்து பார்த்த போது அங்கு வீரபத்திரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது முகம் கல்லால் தாக்கி சிதைந்த நிலையில் காணப்பட்டது.

அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகில் 2 மது பாட்டில்கள், அதனை குடிக்க பயன்படுத்திய பிளாஸ்டிக் கப்புகள் கிடந்தன. எனவே நள்ளிரவில் வீரபத்திரன் மற்றும் சிலர் அந்த இடத்தில் மது அருந்தியிருக்கலாம் என்றும், அதில் ஏற்பட்ட தகராறில் வீரபத்திரனை கொடூரமாக கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட வீரபத்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

வீரபத்திரன் மது குடிக்கும் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது முன் விரோதம் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News